அஜீத் பவார் மனைவிக்கு துணை முதல்வர் பதவி?
அஜீத் பவாரின் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்
அஜீத் பவாரின் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார், புதன்கிழமையில் (ஜன. 28) விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது மனைவியான சுனேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்க தேசியவாத காங்கிரஸ் முன்வந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
அஜீத் பவாரின் இறுதிச் சடங்கு இன்று அவரது சொந்த தொகுதியான பாராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்தான் திடலில் இன்று பகல் 12 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, அஜீத் பவாரின் மனைவி சுனேத்ரா பவாரை கட்சித் தலைவர்களான ப்ரஃபுல் படேல், சாகன் பூஜ்பல், தனன்ஜெய் முன்டே ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பின்போது, சுனேத்ரா பவாரை துணை முதல்வர் பதவிக்கு கட்சித் தலைவர்கள் அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், சுனேத்ரா பவாருடனான சந்திப்பில் அரசியல் பேச்சுகள் இல்லை என்று சாகன் பூஜ்பல் தெரிவித்தார்.
மேலும், சுனேத்ரா பவார் தற்போது மாநிலங்களவையின் உறுப்பினராக உள்ள நிலையில், அவரை மாநில அமைச்சரவையிலும் சேர்க்க மக்கள் மத்தியில் விருப்பம் இருப்பதாக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அமைச்சர் நர்ஹரி ஜிர்வாள் கூறியுள்ளார்.