தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று குருகிராமில்!
மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது பற்றி..
குருகிராமில் உள்ள 5 தனியார்ப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த பல மாதங்களாகவே கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், வணிக வளாகங்கள், முக்கியஸ்தர்கள் வீடு, அலுவலகம் எனத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவதும், சோதனைக்குப் பின் அவை புரளி என்பதும் தொடர்ந்து வருகின்றது.
அந்தவகையில், இன்று குருகிராமில் உள்ள ஐந்து தனியார்ப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டல் அஞ்சல்கள் பற்றிய தகவல் கிடைத்ததும், போலீஸார் பள்ளி வளாகத்திற்கு விரைந்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் படையுடன் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது.
ஆனால் சந்தேகத்திற்கு இடமான பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மின்னஞ்சல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, ஹரியாணா, பஞ்சாப் மற்றும் சண்டீகரில் உள்ள பல பள்ளிகளுக்கு சமீபத்திய மாதங்களில் இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளன.
இருப்பினும், அனைத்து அச்சுறுத்தல்களும் புரளிகளாக மாறியுள்ளன.