தேவெ கெளடா, கார்கே, சரத் பவாரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்! பிரதமர் மோடி
மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை...
நாடாளுமன்றத்தில் பாதிக்கும் மேலான வாழ்க்கையை கழித்த முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சரத் பவாரிடம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார்.
நாட்டில் 10 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. காலியாகவுள்ள இடங்களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டு, புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மாநிலங்களவையில் பதவிக் காலம் நிறைவடைந்த உறுப்பினர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாநிலங்களவை உறுப்பினர்களை பாராட்டி உரையாற்றினர்.
மோடி பேசியதாவது:
”அவையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதங்கள் நடைபெறுகின்றன. அவற்றில் ஒவ்வொரு உறுப்பினரு தனித்துவமாக பங்காற்றியுள்ளனர். இதுபோன்ற தருணங்களில் கட்சி எல்லைகளைக் கடந்து பொதுவான மரியாதை உருவாகிறது. பதவிக் காலம் நிறைவடைந்து அவையைவிட்டு செல்லும் உறுப்பினர்களிடம் அரசியலில் முடிவே இல்லை என்பதை சொல்ல விரும்புகிறேன்.
எச்.டி. தேவெ கெளடா, மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார் ஆகியோர் தங்கள் வாழ்நாளின் பாதிக்கும் மேலான காலத்தை நாடாளுமன்ற பணிகளுக்காக செலவிட்ட மூத்த தலைவர்கள். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்தார்.