ஈரான் போர்! தொழில்நுட்பத் துறையில் நேரடித் தாக்கம் இல்லை: இன்ஃபோசிஸ்
மேற்கு ஆசிய மோதலின் காரணமாக தொழில்நுட்பத் துறையில் நேரடித் தாக்கம் இல்லை என இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் தெரிவித்தது குறித்து...
மேற்கு ஆசிய மோதலின் காரணமாக தொழில்நுட்பத் துறையில் நேரடித் தாக்கம் இல்லை என இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து கடந்த பிப்.28 ஆம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகள் மீது பதில் தாக்குதல்களை நடத்தியது.
போர் இருபக்கமும் தொடர்ந்த நிலையில், ஈரான் உலகளாவிய எண்ணெய் வழிப்போக்குவரத்தின் முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியது.
இதன்காரணமாக, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தியா நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒவ்வொரு கப்பலாக இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றது.
இதுகுறித்து பேசிய இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், "தொழில்நுட்பத் துறையில் நேரடித் தாக்கம் இல்லை. ஆனால் சாமானிய மக்கள் மற்றும் பொருளாதாரத்திற்கு நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது கவலைக்குரிய விஷயம். போர் மேலும் தீவிரமடையாது என்று நம்புகிறேன். ஏனென்றால், போரால் நேரடியாக பாதிக்கப்பட்ட ஒரு பெரிய புலம்பெயர் சமூகம் உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதனிடையே, போரைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.