அஸ்ஸாமில் 2021ஐ விட அதிக இடங்களை பாஜக கைப்பற்றும்: அஜந்தா நியோக்!
பாஜக 2021ஆம் ஆண்டை விடச் சிறப்பாகச் செயல்படும்..
அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 2021ஆம் ஆண்டை விடச் சிறப்பாகச் செயல்படும் என நிதியமைச்சரும், கோலாகாட் தொகுதியின் வேட்பாளருமான அஜந்தா நியோக் தெரிவித்தார்
இதுதொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,
கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக கட்சியின் நிர்வாகம் மற்றும் வளர்ச்சிப் பணிகளின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதே இதற்கு முக்கியக் காரணம். 2021-ஆம் ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலான சட்டப்பேரவை இடங்களை பாஜக கைப்பற்றும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் அஸ்ஸாம் மக்கள் உண்மையாக வளர்ச்சியையும் அரசியல் ஸ்திரத்தன்மையையும் கண்டுள்ளனர். மக்களின் இந்த நம்பிக்கை தேர்தலில் எங்களுக்கு வலுவான மக்கள் ஆணையாக உருவெடுக்கும்.
பெண் வாக்காளர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இம்முறை தேர்தலில் வாக்களிக்கும் சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும், குறிப்பாகப் பெண்களின் பங்கேற்பு கணிசமாக இருக்கும். இம்முறை 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும், பெண் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பிரத்யேகமாக பாஜகவிற்கே அளிப்பார்கள். சுயஉதவிக் குழுக்கள், நிதிசார் உள்ளடக்கத் திட்டங்கள் மற்றும் லக்ஷ்பதி தீதி போன்ற நலத்திட்டங்கள் வாயிலாகப் பெண்களை மேம்படுத்துவதில் எங்கள் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
தேர்தல் முடிவுகள் மக்களின் உண்மையான மனநிலையைப் பிரதிபலிக்கும். மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா மீது எதிர்க்கட்சிகள் சுமத்தியுள்ள பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு மக்கள் எவ்வாறு பதிலளித்துள்ளனர் என்பதை இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சி உணர்ந்துகொள்ளும். அஸ்ஸாம் மக்களுக்கு உண்மைத் தெரியும், களத்தில் நடைபெற்றுள்ள வளர்ச்சிப் பணிகளை அவர்கள் நேரடியாகக் கண்டுள்ளனர்.
பெண்களின் அரசியல் பங்கேற்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், அரசியலில் இன்னும் தீவிரமாக ஈடுபட வேண்டும். தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர்கள் முக்கியம் என்றாலும், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டாயம் அதிகரிக்க வேண்டும். பெண்கள் தீவிர மனப்பான்மையுடன் அரசியலில் நுழைந்து, பொதுச் சேவையில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். சமச்சீரான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நல்லாட்சிக்கு, பெண்களின் தலைமைத்துவம் மிகவும் அவசியமாகும்.
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலில், கோலாகாட் தொகுதியில் அஜந்தா நியோக் 81,651 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிதுபன் சைகியா 72,326 வாக்குகளைப் பெற்ற நிலையில், 9,325 வாக்குகள் வித்தியாசத்தில் அஜந்தா நியோக் வெற்றி வாகை சூடினார்.
126 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாம் மாநிலத்தில், தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் இயங்கும் பாஜக அரசு, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் உள்ளது. அதேவேளையில், ஆளும் கட்சியைத் தோற்கடித்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் இலக்குடன் காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது.