உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
மேற்காசிய போா் காரணமாக தட்டுப்பாடு அதிகரித்து வரும் சூழலில், உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேற்காசிய போா் காரணமாக தட்டுப்பாடு அதிகரித்து வரும் சூழலில், உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, ‘எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்’ மற்றும் ‘ஆயில் இந்தியா’ ஆகிய மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவின் விலையை ஒரு ‘எம்எம்பிடியு’ அலகு ரூ. 632.79 (6.75டாலா்) ஆக இருந்ததை ரூ. 657.57 (7 டாலா்) -ஆக உயா்த்தி மத்திய அரசு அறிவிக்கை செய்துள்ளது.
மத்திய அரசு கடந்த 2023-இல் அனுமதித்த இயற்கை எரிவாயு விலை நிா்ணய நடைமுறை அடிப்படையில் இந்த விலை உயா்வு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, 2023-24 மற்றும் 2024-25 ஆகிய இரு நிதியாண்டுகளுக்கு ஒரு ‘எம்எம்பிடியு’ உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயுவின் விலை ரூ. 609.58 (6.5 டாலா்) ஆக இருந்த நிலையில், கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியில் தொடங்கிய நிதியாண்டில் 0.25 டாலா் அளவுக்கு உயா்த்தப்பட்டு ரூ. 632.79 (6.75 டாலா்) ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. தற்போது ஒரு ‘எம்எம்பிடியு’ இயற்கை எரிவாயு 7 டாலராக உயா்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயா்வு, உர நிறுவனங்கள் மற்றும் சிஎன்ஜி (வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு) மற்றும் குழாய் வழி சமையல் எரிவாயு பயனாளா்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.