கூட்டணிகளைப் பயன்படுத்திவிட்டு காங்கிரஸ் கைவிடுகிறது: பாஜக
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து...
காங்கிரஸ் தங்களது கூட்டணிகளைப் பயன்படுத்திவிட்டு, பிறகு அவற்றைக் கைவிடுகிறது என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. தவெக தலைமையில் ஆட்சியமைக்க118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்பதால் காங்கிரஸ் தனது 5 உறுப்பினர்களுடன் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதனால், திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிந்தது.
மேலும், வரும் நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் தவெக உடனான கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
Advertisement
இந்த நிலையில், மக்களவைத் தலைவருக்கு திமுக எம்.பி. கனிமொழி கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “தற்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் இருக்கைக்கு அருகே திமுக எம்.பி.க்களின் இருக்கை இருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் தற்போது கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளதால் இருக்கைகளை மாற்றித்தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா, "தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் காங்கிரஸ், திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு முத்தலாக். காங்கிரஸ் தனது கூட்டணிகளைப் பயன்படுத்திவிட்டு, பிறகு அவற்றைக் கைவிடுகிறது" எனத் தெரிவித்தார்.