தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 20 திரிணமூல் எம்.பி.க்கள் ஆதரவு!
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 20 பேர் பாஜக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக மக்களவைத் தலைவருக்குக் கடிதம் எழுதியிருப்பது குறித்து...
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களில் 20 பேர் பாஜக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக மக்களவைத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மாநில சட்டப்பேரவையில் பாஜக வெற்றிபெற்று, 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியைத் தொடர்ந்து, கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மமதா பானர்ஜி அதிருப்தியடைந்த திரிணமூல் எம்எல்ஏ-க்கள் 58 பேர், ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் அணி திரண்டனர். அதுமட்டுமின்றி, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் ரிதப்ரதா பானர்ஜி கைப்பற்றினார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கட்சிக்குள் நிலவும் பூசல் காரணமாக, திரிணமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் சிலர் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணையவிருப்பதாக திரிணமூல் எம்.பி. ககோலி கோஷ் தஸ்திதார் கூறியிருப்பது மாநில அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளருடன் ககோலி கோஷ் தஸ்திதார் எம்.பி. பேசியதாவது, நான் உள்பட 20 எம்.பி.க்கள் தனி அணியாகச் செயல்படுவதுடன், தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிப்பதாகவும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மேற்கு வங்க மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸில் தற்போது 28 மக்களவை எம்.பி.க்கள் உள்ள நிலையில், 20 எம்.பி.க்கள் தனி அணியாகச் செயல்பட முடிவெடுத்துள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் தனி அணியாகச் செயல்பட முடியும் என்பதால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது.