உண்மையான திரிணமூல் காங்கிரஸ் நாங்கள்தான்: அதிருப்தி எம்.பி.க்கள்
மமதாவுக்கு எதிரான அதிருப்தி எம்.பி.க்கள் மக்களவைத் தலைவரைச் சந்தித்து உண்மையான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கான அங்க்கீகாரத்தைக் கோர உள்ளது பற்றி...
மமதா பானர்ஜிக்கு எதிரான அதிருப்தி எம்.பி.க்கள் மக்களவைத் தலைவரைச் சந்தித்து உண்மையான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கான அங்க்கீகாரத்தைக் கோர உள்ளனர் என்று ஜெகதீஷ் சந்திர பர்மா பசூனியா எம்.பி. வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் மட்டுமே வென்றதால், ஆட்சியை இழந்தது.
சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவர் (எதிர்க்கட்சித் தலைவர்), துணைத் தலைவர், தலைமை கொறடா நியமனத்தில் மமதா பானர்ஜி முடிவுக்கு எதிராக கட்சியில் குரலெழுப்பப்பட்டது. இதனால் கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தன. இதனைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிதபிரத பானர்ஜியை சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவராக நியமிக்க 58 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
சட்டப்பேரவையைத் தொடர்ந்து மக்களவையிலும் திரிணமூல் காங்கிரஸ் இரண்டு அணிகளாகப் பிளவுபட்டுள்ளன. அக்கட்சியைச் சேர்ந்த 28 எம்.பி.க்களில் 20 எம்.பி.க்கள் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிா்லாவிடம் திங்கள்கிழமை (ஜூன் 8) கடிதம் கொடுத்திருந்தனர். இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.க்கள் மூன்று பேர் ராஜிநாமா செய்ததோடு கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தனர்.
இதுகுறித்து பேசிய ஜெகதீஷ் சந்திர பர்மா பசூனியா, வரும் திங்கள்கிழமை (ஜூன் 15) நாங்கள் மக்களவைத் தலைவரைச் சந்திப்போம். உண்மையான திரிணமூல் காங்கிரஸ் கட்சியாக எங்களை அங்கீகரிக்கும்படி, கோரிக்கை வைப்போம். 19 எம்.பி.க்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கட்சியில் உள்ள மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜிக்கும் மமதாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கும் உள்கட்சி பூசல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.