சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!
சிபிஎஸ்இ கல்வி முறையில் 9-ஆம் வகுப்புக்கு ஜூலை முதல் 3-ஆவது மொழி கட்டாயம்!
புது தில்லி : சிபிஎஸ்இ கல்வி முறையில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சிபிஎஸ்இ தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் :
2026, ஜூலை 1 முதல், ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மும்மொழிக் கல்வி (ஆர்1, ஆர்2, ஆர்3) கட்டாயமாக்கப்படுகிறது. அவற்றுள், இந்திய மொழிகளுள் ஏதேனும் இரண்டை இரு மொழிப்பாடமாக தேர்ந்தெடுத்துப் பயில வேண்டும்.
Advertisement
அதன்படி, வெளிநாட்டு மொழி கற்க விரும்பும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இந்திய மொழிகளுள் ஏதேனும் இரண்டை தேர்ந்தெடுத்துப் பயில்வதுடன், வெளிநாட்டு மொழியை மூன்றாவது மொழியாக மட்டுமே தேர்ந்தெடுத்துப் பயில முடியும் அல்லது நான்காவது விருப்ப மொழியாக அந்த மொழியைப் பயிலலாம்.
மாணாக்கர் மீது அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆர்3 எனும் மூன்றாவது மொழிப் பாடம் இடம்பெறாது. அப்பாடம் முழுக்க முழுக்க உள் மதிப்பீட்டுத் தேர்வாகவே நடைபெறும். மேற்குறிப்பிட்ட மொழித்தேர்வில் மாணாக்கரின் திறன் சிபிஎஸ்இ சான்றிதழில் பிரதிபலிக்கும்.
மேலும், 6 முதல் 9 வகுப்புகளுக்கு எந்தெந்த மொழிகளை விருப்பப்பாடமாக பள்ளிகள் தேர்ந்தெடுத்துள்ளன என்ற விவரத்தை வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஓஏஎஸ்ஐஎஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.