கேரளத்தில் மகளிருக்கு இலவசப் பேருந்து: கட்டண உயர்வைக் கோரும் தனியார் பேருந்து நிறுவனங்கள்!
கேரளத்தில் மகளிருக்கு இலவசப் பேருந்து திட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து, தனியார் பேருந்து நிறுவனங்கள் கட்டண உயர்வைக் கோரியுள்ளது குறித்து...
கேரளத்தில் மகளிருக்கு இலவசப் பேருந்து திட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து, தனியார் பேருந்து நிறுவனங்கள் கட்டண உயர்வைக் கோரியுள்ளன.
கேரளத்தில், முதல்வராக வி.டி. சதீசன் இன்று (மே 18) காலை பதவியேற்றுக் கொண்டார். மேலும், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 20 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அந்த மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
கேரள மாநில தலைமைச் செயலகத்துக்குச் சென்ற முதல்வர் வி.டி. சதீசன் தனது அலுவலகப் பணிகளைத் தொடங்கினார்.
Advertisement
இந்த நிலையில், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலியே சில முக்கியத் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதில் கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டம் வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்கள் தொழில்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய அரசு தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் தெரிவித்ததாவது:
”எங்கள் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளாக பேருந்துக் கட்டணங்கள் திருத்தி அமைக்கப்படாததாலும், அதேவேளையில், டீசல் விலை இருமுறை உயர்ந்துள்ளதாலும், நாங்கள் பேருந்துக் கட்டணங்களை உயர்த்த கோரிக்கை விடுக்கிறோம்.
செலவுகள் அதிகரித்துவரும் நிலையில், எங்கள் பயணிகளில் கணிசமான பகுதியினராக உள்ள பெண்கள் அரசுப் போக்குவரத்திற்கு மாறினால், எங்களால் சேவைகளைத் தொடர்வது கடினமாகிவிடும்” எனத் தெரிவித்தனர்.