ஈமு கோழி நிறுவன விளம்பரத்தில் நடித்த இருவர் சொத்துகளை இழப்பீட்டில் சேர்க்க நடவடிக்கை
ஈரோடு, ஆக.8: ஈரோட்டில் சுசீ ஈமு கோழி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுசீ ஈமு கோழி நிறுவனத்தின் செயல்பாட்டா
ஈரோடு, ஆக.8: ஈரோட்டில் சுசீ ஈமு கோழி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சுசீ ஈமு கோழி நிறுவனத்தின் செயல்பாட்டால், மாவட்டத்தில் உள்ள மற்ற அனைத்து ஈமு கோழி நிறுவனங்களும் தங்கள் பொருளாதார நிலை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் விளக்க வேண்டும் என்றும் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், இதனை பெரும்பாலான நிறுவனங்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஓரிருவரே கூட்டத்துக்கு ஆஜராகினர். பெரும்பாலானவர்களும் தங்கள் செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்து பதுங்கிவிட்டனராம்.
இந்நிலையில், முதலீட்டாளர் நல சட்டம் 1977ன் படி, சுசீ ஈமு கோழி நிறுவனத்திற்காக விளம்பரப் படங்களில் நடித்த திரைப்பட நடிகர்கள் இருவர் சொத்துகளையும் இழப்பீட்டு அறிக்கையில் சேர்க்க வகை செய்ய இன்று வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர் அதிகாரிகள். அவ்வாறு புகார் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெறும் பட்சத்தில், பத்தில் நான்கு பங்கு வரை இழப்பீடு முதலீட்டாளர்களுக்கு வழங்கப் பட சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். விளம்பரப் படத்தில் நடித்த நடிகர்கள் பேரிலும் நடவடிக்கை பாயும் என்ற செய்தி ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.