திண்டுக்கல் ஐ.பெரியசாமியை கைது செய்ய முயற்சி?
அவர்களை தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். சர்ச் வாரண்ட், கைது வாரண்ட் என எதுவும் இல்லாமல் வீட்டுக்குள் நுழையக்கூடாது என்று ...
திண்டுக்கல், ஜூன் 2: திமுக முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான திண்டுக்கல் ஐ.பெரியசாமியைக் கைது செய்ய முயற்சி நடப்பதாக திமுகவினர் ஆவேசப் பட்டனர்.
ஐ.பெரியசாமியின் உறவினரும் திமுக ஒன்றியச் செயலாளருமான பி.சி.முரளிதரனை விசாரணைக்காக போலீசார் நேற்று அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், இது குறித்த தகவலை போலீஸார் மறுத்துள்ளனர். இருப்பினும், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே பூம்பூர் காவல் நிலையத்தில் இவரிடம் விசாரணை நடைபெற்றதாகத் தெரிய வந்ததை அடுத்து திமுக தொண்டர்கள் காவல் நிலையத்தைச் சூழ்ந்து கொண்டனர். மேலும், காவல்நிலையத்தை முற்றுகையிட்டு விவரம் கேட்டனர். போலீசார் தகுந்த ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் இவ்வாறு அச்சுறுத்துவதாகத் தெரிவித்த அவர்கள், இது குறித்து முறையான ஆவணங்களை அளிக்குமாறு போலீசாரை வற்புறுத்தினர்.
இந்நிலையில், டிஎஸ்பி சுருளிவேல் தலைமையில் திண்டுக்கல் கோவிந்தாபுரம் சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீட்டுக்குள் இன்று காலை 20 போலீஸார் நுழைய முற்பட்டனர். ஆனால் அவர்களை தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். சர்ச் வாரண்ட், கைது வாரண்ட் என எதுவும் இல்லாமல் வீட்டுக்குள் நுழையக்கூடாது என்று தடுத்தனர். மேலும், இந்த ஆவணங்களைக் காட்டுமாறு போலீஸாரை வற்புறுத்தினர். அதற்கு போலீஸார் மறுக்கவே, டிஎஸ்பி உள்ளிட்ட 15 போலீஸாரை வீட்டுக்குள் வைத்துப் பூட்டினர் திமுக தொண்டர்கள். மேலும், டிஎஸ்பியின் செல்போனையும் பறித்துக் கொண்டனர். சர்ச் வாரண்ட், கைது வாரண்ட் குறித்து எஸ்பியிடம்தான் கேட்க வேண்டும், அவருடைய உத்தரவை அடுத்தே ஐ.பெரியசாமி வீட்டுக்கு சோதிக்க வந்ததாக திமுக தொண்டர்களிடம் டி.எஸ்.பி கூறினார். இதனிடையே வழக்குரைஞர்கள் வரவே, அவர்கள் சுமார் 30 நிமிடங்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து, போலீஸார் வெறுங்கையுடன் திரும்பினர்.
Advertisement
ஏற்கெனவே சென்ற மாதம் திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் ஆவணங்கள், பொருள்கள் எதுவும் சிக்க வில்லை. இதனால், முரளிதரனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று திண்டுக்கல் ஐ.பெரியசாமியை கைது செய்ய போலீஸார் துடிக்கின்றனர் என்று திமுக தொண்டர்கள் குற்றம் சாட்டினர்.
இன்று காலை முதல் நிகழ்ந்த இத்தகைய நிகழ்வுகளால் திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.