பள்ளிகளுக்கான இடவசதியை நிர்ணயம் செய்வதற்கான கூட்டத்தில் வாக்குவாதம்
திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியர் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இட வசதி நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுக் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியர் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இட வசதி நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுக் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில், இன்று தனியர் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இட வசதி நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.
ஏற்கனவே சென்னை, கோவையில் இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்து முடிந்துவிட்டது.
Advertisement
இன்று திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் ஆகிய பகுதிகளுக்கு இட வசதி நிர்ணயம் செய்வதற்காக தனியார் பள்ளிகளின் முதல்வர்கள், தாளாளர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தேவராஜன் தலைமையில் இக்கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சிலர் கூட்டத்தில் பேச அனுமதிக்க வேண்டும் என்று பெயர் கொடுத்தனர்.
ஆனால், அரசு அதிகாரிகள் அவர்களது பெயர்களை விட்டுவிட்டு மற்ற அனைவரையும் பேச அழைத்துவிட்டு, பிறகு கூட்டம் முடிந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதனை எதிர்த்து அந்த உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். வல்லுநர் குழு கருத்துக் கேட்புக் கூட்டம் என்பது வெறும் நாடகமாக நடக்கிறது. ஏற்கனவே முடிவு செய்துவிட்டு, தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அரசு செயல்படுகிறது. இதனால்தான் நாங்கள் பெயர் கொடுத்தும் எங்களைப் பேச கூப்பிடவில்லை என்று கோஷம் எழுப்பினர்.
இதனால், மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களுக்கும், தனியார் பள்ளி முதல்வர்கள் மற்றும் தாளாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையே, கூட்டம் முடிந்துவிட்டது என்று கூறிவிட்டு அதிகாரிகள் அவசர அவசரமாக கூட்டம் நடைபெற்ற இடத்தை விட்டுச் சென்றுவிட்டனர்.
அரசு அதிகாரிகள் பள்ளியில் இருந்து வெளியே வரும் போது அவர்களை வழி மறித்து போராட்டம் நடந்த அந்த பள்ளியிலேயே மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் காத்திருக்கின்றனர்.
இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.