முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூர், நாகையில் பூமிக்கு அடியில் மின்சார கேபிள் அமைக்க திட்டம்

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.856 கோடி மதிப்பீட்டில் புதிய கடலோர பேரிடர் தடுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் கடலூர், நாகை

Updated On : 21 மார்ச், 2013 at 2:59 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.856 கோடி மதிப்பீட்டில் புதிய கடலோர பேரிடர் தடுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் கடலூர், நாகை மாவட்டங்களில் பூமிக்கு அடியில் கேபிள் வயர்கள் அமைத்து மின்சாரம் விநியோகம் செய்யப்பட உள்ளது.

கடலோர பேரிடர் தடுப்பு திட்டம் சார்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம்  கடலூரில் அண்மையில் நடைபெற்றது. இதில் உலக வங்கி நிதி உதவியுடன் புதிய கடலோர பேரிடர் தடுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சென்னை மீன்துறை மாவட்ட வருவாய் அதிகாரி சையத் ஹூமாயூன், ஆலோசகர் முத்துசாமி, செயற்பொறியாளர் தணிகாசலம், உலக வங்கி பிரதிநிதிகள் வைத்தீஸ்வரன், ராஜா ஆகியோர் பேசினர்.

கடந்த 26-12-2004ம் ஆண்டு எதிர்பாராமல் நிகழ்ந்த ஆழிப்பேரலையின் தாக்குதலை தொடர்ந்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 13 கடலோர மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசின் சார்பில் சுமார் ரூ.5,000 கோடி செலவில் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் மத்திய அரசின் உதவியோடு செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் முடிவுறும் நிலையில் உள்ளன.

Advertisement

இனி வரும் காலங்களில் இதுபோன்ற பேரிடர்களை குறைத்திடும் வகையில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சுமார் ரூ.856 கோடி மதிப்பீட்டில் புதிய கடலோர பேரிடர் தடுப்பு திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பேரிடர்களை நிரந்தரமாக தடுத்தாளுதல், திட்டமிடப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் 121 புயல் பாதுகாப்பு மையங்கள் ஆண்டு முழுவதும் பயன்படும் வகையில் பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்களில் அமைக்கப்படவுள்ளது.

இதுதவிர 12 மாவட்டங்களில் சுமார் 50 கிலோ மீட்டர் நீளமுள்ள புதிய பாதுகாப்பு வழித்தடங்களும் அமைக்கப்படும்.  மேலும் கடலோர மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் இதுபோன்ற பேரிடர்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் அனைவரும் அறிந்துகொள்ளும்வகையில் புதிய தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் 439 இடங்களில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு கருவிகள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு முதல் முழுமையாக செயல்படும்.

கூடுதலாக இத்திட்டத்தின் கீழ் எளிதில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய கடலோர மாவட்டங்களான கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான நிறுவனத்தின் மூலம் பூமிக்கடியில் மின் கம்பிகள் பதிக்கும் பணிகளும் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.