சிவகங்கை மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவு சதவீத கணக்கு தெரியாமல் அதிகாரிகள் திணறல்
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் எவ்வளவு என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் தேர்தல் தொடர்பான அலுவலர்கள் திணறி வருகின்றனர்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் எவ்வளவு என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் தேர்தல் தொடர்பான அலுவலர்கள் திணறி வருகின்றனர். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளும் (சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை), புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம், ஆலங்குடி ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் திருமயத்தில் 1,97,448 வாக்காளர்களும், ஆலங்குடியில் 1,88,051பேரும், காரைக்குடியில் 2,69,818 பேரும், திருப்பத்தூரில் 2,54,139 பேரும், சிவகங்கையில் 2,58,377 பேரும், மானாமதுரை தனி தொகுதியில் 2,42,454 பேர் என மொத்தம் 14,10,287 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். திருமயம் தொகுதியில் 245 வாக்குச் சாவடிகளும், ஆலங்குடி தொகுதியில் 228 வாக்குச் சாவடிகளும், காரைக்குடியில் 300, திருப்பத்தூரில் 307, சிவகங்கையில் 313, மானாமதுரையில் 292 என மொத்தம் 1,685 வாக்குச் சாவடிகள் மூலம் வாக்குப் பதிவு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்று (வியாழக்கிழமை) 16ஆவது மக்களவைக்கான தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பதிவான வாக்குகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான வே.ராஜாராஜமன் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு முடிவு பெற்றதைத் தொடர்ந்து மொத்தம் பதிவான வாக்குகள் எவ்வளவு என்பதை தெளிவாக தேர்தல் தொடர்பான அலுவலர்களால் தெரிவிக்க முடியவில்லை. உத்தேசமாக 71 சதவீதம் என இரவு 8 மணிக்கு தெரிவித்த அதிகாரிகள் விரைவில் சரியான விவரத்தை கூறுவதாகத் தெரிவித்தனர். ஆனால் இரவு 11 மணி வரையிலும் எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது என்ற விவரத்தை தேர்தல் அலுவலர்களால் தெரிவிக்க முடியவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலின் போது காங். வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறித்த வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்து.