முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

உலக புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி திருமஞ்சன தரிசனம் ஆகியவை தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:37 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற டிச.27-ம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

உலக புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி திருமஞ்சன தரிசனம் ஆகியவை தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வருகிற டிச.27–ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதனை தொடர்ந்து வருகிற 31–ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், ஜனவரி 2–ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடக்கிறது. ஜன.3–ந் தேதி சோமாஸ்கந்தர் வெடடுக்குதிரையில் வீதிஉலாவும் நடைபெறுகிறது. ஜன.4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜன.5-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜன.6-ம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழாஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர். உற்சவ 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.