முகப்பு
தற்போதைய செய்திகள்

மூலைக்கரைப்பட்டியில் கொள்ளையடிக்கப்பட்ட 12.5 பவுன் நகைகள் மீட்பு:3 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டியில் வீடுபுகுந்து கொள்ளையடிக்கப்பட்டதில் பனிரெண்டரை பவுன் தங்கநகையை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவ் வழக்கில் 3 பேரை கைது

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டியில் வீடுபுகுந்து கொள்ளையடிக்கப்பட்டதில் பனிரெண்டரை பவுன் தங்கநகையை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவ் வழக்கில் 3 பேரை கைது செய்துள்ளதாகவும், தனியார் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ள 10 பவுன் நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) து.பெ.சுரேஷ்குமார், செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

நான்குனேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவர், கடந்த 9-12-2006-ம் ஆண்டில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தாராம். மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த இருபத்தி இரண்டரை பவுன் தங்கநகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின் பேரில் மூலைக்கரைப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் எனது (சுரேஷ்குமார்) உத்தரவின்பேரில், நான்குனேரி துணை கண்காணிப்பாளர் எஸ்.சண்முகம் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் ஏ.சுந்தரநேசன், சிறப்பு உதவி ஆய்வாளர் அசோகன், செல்லதுரை, காவலர்கள் நயினார், முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இவ் வழக்கில் தொடர்புடையதாக மூலைக்கரைபட்டியைச் சேர்ந்த கேந்திரபால் மகன் திருமலைநம்பி (45), பெருமாள்புரத்தைச் சேர்ந்த கோயில்பிச்சை மகன் தர்மராஜ் (33), மூலைக்கரைப்பட்டி நேரு நகரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் பூலுடையார் (21) ஆகியோரை அம்பலத்தில் வைத்து தனிப்படை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான பனிரெண்டரை பவுன் தங்கநகைகள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 10 பவுன் தங்க நகைகள், கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளது. அதனை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →