நெல்லை அருகே ஆட்டோ-ஜே.சி.பி. மோதல்: 5-ம் வகுப்பு மாணவி சாவு, மேலும் 16 பேர் காயம்
திருநெல்வேலி அருகே செவ்வாய்க்கிழமை காலையில் நிகழ்ந்த விபத்தில் 5-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார். அவருடன் பயணித்த 17 மாணவர்-மாணவிகளும் காயமடைந்தனர்.
திருநெல்வேலி அருகே செவ்வாய்க்கிழமை காலையில் நிகழ்ந்த விபத்தில் 5-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார். அவருடன் பயணித்த 17 மாணவர்-மாணவிகளும் காயமடைந்தனர்.
திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் ஊராட்சி, கலைஞர் காலனியைச் சேர்ந்த செல்வகுமார்-புனிதவதி தம்பதியின் மகள் சசிகலா (11). இவர், தாழையூத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இவரும், இவரது தங்கை மலர்மதி (8) உள்பட அப் பகுதியைச் சேர்ந்த மொத்தம் 18 மாணவர்-மாணவிகள் ஒரு ஆட்டோவில், தாழையூத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை காலையில் சென்று கொண்டிருந்தனராம்.
தாழையூத்தைச் சேர்ந்த தளவாய் மகன் மணிகண்டன் (41) ஆட்டோவை ஓட்டினார். கங்கைகொண்டான் சிப்காட் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த ஜே.சி.பி. மீது ஆட்டோ மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் மணிகண்டன் உள்பட ஆட்டோவில் பயணித்த மாணவர்-மாணவிகள் அனைவரும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சசிகலா இறந்தார்.
காயமடைந்த மாணவர்கள் விவரம்: சிரீகிருஷ்ணன் (8), விஸ்வா (8), நிஷாந்தினி (8), தருண் (8), அலெக்ஸ் (8), கவியரசன் (9), வினோதினி (12), கார்த்திக் (7), மதிவர்த்தினி (8), சங்கீதா (9), நிரோசன் (10), திலீப்குமார் (10), நிவாஷ் (9), வாஞ்ஜோதி (8), வினோத்ராஜ் (10), கார்த்திகேயன் (8), மலர்மதி (8). காயமடைந்த அனைவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி கோட்டாட்சியர் சீனிவாசன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து குழந்தைகளை பார்த்து ஆறுதல் கூறினார். ஏ.எஸ்.பி. அருண்சக்திகுமார் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.