வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதே ஆக்கபூர்மான வளர்ச்சிக்கு அடையாளம் - நிதி அமைச்சர் ப.சிதம்பரம்
சிவகங்கையை அடுத்த சக்கந்தியில் எஸ்ஸார் குழுமத்தின் ஏஜிஸ் அவுட்சோர்சிங் பயிற்சி நிறுவன அலுவலகத் திறப்பு விழா மற்றும் இளைஞர்களுக்கு பயிற்சி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி
வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவது தான் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு அடையாளம் என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கையை அடுத்த சக்கந்தியில் எஸ்ஸார் குழுமத்தின் ஏஜிஸ் அவுட்சோர்சிங் பயிற்சி நிறுவன அலுவலகத் திறப்பு விழா மற்றும் இளைஞர்களுக்கு பயிற்சி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி சக்கந்தியில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்ஸார் குழுமத்தின் மேலாளர் அன்சுமன் ரூயி தலைமை வகித்தார். பயிற்சிக்கான நியமன உத்தரவினை 25 பேருக்கு வழங்கி மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது.
இங்கு நடைபெறும் நிகழ்ச்சியின் தாக்கத்தை பலர் உணர்ந்துள்ளனரா என்பது தெரியவில்லை. இந்த மேடையில் விலையில்லா பொருள்களான ஆட்டுக்கல் வழங்கும் நிகழ்ச்சியாக இருந்தால் பலருக்கு அது மகிழ்ச்சியானதாக இருந்திருக்கக் கூடும். விலையில்லா பொருள்களை தருவது நல்லதா இல்லையா என்பதை சொல்வதற்காக நான் இங்கு வரவில்லை. இந்தப் பொருள்கள் தருவதைவிட நாம் ஒரு நிலையான சமுதாய புரட்சிக்கு நாம் வித்திட்டுள்ளோம்.
Advertisement
எஸ்ஸôர் நிறுவனம் நாடு முழுவதும் தொழில் குழுமத்தை நடத்தி வருகிறது. நம்முடைய வேண்டுகோளை ஏற்றி சிவகங்கை மாவட்டம் சக்கந்தியில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு மையத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதன் மூலம் ஒரே நேரத்தில் 250 பேருக்கு பயிற்சி வழங்கக் கூடிய வசதி இங்கு உள்ளது. 100 பேரைக் கொண்ட பயிற்சி வகுப்பு துவங்கப்பட உள்ளது. முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பேருக்கு அடையாளமாக நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சியின் போது மாதம் ரூ.6 ஆயிரம் உதவித் தொகையாக வழங்குகின்றனர். பயிற்சியும் தந்து மாதம் உதவித் தொகையையும் தருவது புதிய பொருளாதாரத்தில் முக்கியமான மாறுதல் ஆகும். பயிற்சியின் போது சன்மானம் தந்தால் தான் கற்பவர் ஊக்கமும் ஆக்கமும் அடைவார்கள். பயிற்சி முடிந்த பின்னர் இவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி.
விவசாயக் கூலியாக இருப்பவர்களின் மகள்கள் பலர் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இவர்களில் பலர் கல்விக் கடன் மூலமாகத் தான் கல்லூரி படிப்பை நிறைவு செய்திருப்பார்கள். கல்லூரி படிப்பும் முடித்து, ஊதியத்துடன் பயிற்சியும் கிடைப்பது என்பது தனி மனித வாழ்க்கையில் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் இந்த சமுதாயத்தில் ஒருபுரட்சிக்கு இது வித்திடுவதாக உள்ளது. பின்தங்கிய மக்களுக்கு உலகத் தரம்வாய்ந்த பயிற்சி கிடைப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
இது போன்ற காரியங்கள் சிவகங்கை தொகுதியில் அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, பாண்டியன் கிராம வங்கி போன்றவை பயிற்சி மையங்களைத் தொடங்கி பயிற்சியை வழங்கப்பட்டு வருகிறது. இன்று தனியார் ஒருவர் சக்கந்தி கிராமத்தைத் தேர்வு செய்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு ஷிப்டுக்கு 250 பேருக்கு பயிற்சி வழங்க முடியும். இது தான் பொருளாதார புரட்சிக்கு வித்திடுவது என்பதாகும்.
2 மாதங்களுக்கு ஒருமுறை இது போன்ற பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும். இந்த வாய்ப்பை தொகுதி இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு முன்னேறும் நாள் தான் உண்மையான சுதந்திர நாளாக இருக்கும் என்றார் அமைச்சர்.