பிப்ரவரி 8-ல் சென்னை வருகிறார் நரேந்திர மோடி: பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு
குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை புறநகர் பகுதியில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரசார
குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை புறநகர் பகுதியில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார். புறநகர் பகுதியில் பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகிறார். இதற்கான இடம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.
Advertisement
மக்களவைத் தேர்தலுக்கான பாஜக கூட்டணியில் மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இணைந்துள்ளன. தேமுதிக, பாமக, கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. மதிமுகவுடன் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை இன்னும் இரு நாள்களில் தொடங்கும்.
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி போட்டியிடும். பாஜக இடம்பெறும் அணி அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.
ஜனவரி 12-ல் உறுதிமொழி ஏற்பு:
சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டு நிறைவு விழா வரும் ஜனவரி 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் அன்று மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட விவேகானந்தர் படத்துக்கு முன்பு, மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமைய பணியாற்றுவோம் என பாஜக தொண்டர்கள் உறுதிமொழி ஏற்பார்கள்.
ஜனவரி 31-ல் சுஷ்மா ஸ்வராஜ் வருகை:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் வரும் ஜனவரி 31-ஆம் தேதி தமிழக மீனவர்களின் உரிமைகளைக் காப்பதற்காக நடைபெறும் கடல் தாமரை மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார்.
அரசே மணல் விற்க வேண்டும்:
தமிழகத்தில் மணல் கொள்ளை சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. மணல் கொள்ளை மூலம் நாள் ஒன்றுக்கு தோராயமாக ரூ. 68 கோடி மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
இதனைத் தடுக்க வீடு கட்டுவதற்கான உரிமம் பெறும்போதே தேவையான மணலை அரசே நேரடியாக விற்க வேண்டும். மணல் தேவை அதிகமாக இருப்பதால் மாற்று மணலைக் கொண்டு வீடு கட்டுவதை அரசு ஊக்குவிக்க வேண்டும்.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இயற்கை சீற்றங்களினால் ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே பயிர்க் காப்பீடு மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதனை மாற்றி பயிர்க் காப்பீடு செய்துள்ள தனி ஒரு விவசாயிக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
பேட்டியின்போது பாஜக மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன், மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி, தேசிய செயற்குழு உறுப்பினர் லலிதா குமாரமங்கலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வெங்கடாச்சலம் தலைமையிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதற்கான ஆதரவு கடிதத்தை பொன். ராதாகிருஷ்ணனிடம் வெங்கடாச்சலம் வழ்கினார்.
சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் கிருஷ்ணன் தலமையில் 6 மூத்த வழக்குரைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி செவ்வாய்க்கிழமை பாஜகவில் இணைந்தனர்.