பெண் அடித்துக் கொலை
அதிராம்பட்டினம் காவல் சரகம், பள்ளிகொண்டான் புதுக்குளத் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமார் (35). இவர் மனைவி மலர்க்கொடி (30), மகன் பாலமுருகன் (11). மலர்க்கொடியின் தங்கை மல்லிகா
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே சனிக்கிழமை இரவு பெண் அடித்துக் கொல்லப்பட்டார்.
அதிராம்பட்டினம் காவல் சரகம், பள்ளிகொண்டான் புதுக்குளத் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமார் (35). இவர் மனைவி மலர்க்கொடி (30), மகன் பாலமுருகன் (11). மலர்க்கொடியின் தங்கை மல்லிகா (28). விதவையான இவர் தனது 2 மகள்களுடன் அதே தெருவில் வசித்து வந்தார்.
குமார் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் ரங்கசாமி (55). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மாரியம்மாள், மகள் சாமுண்டீஸ்வரி, கோவிந்தராஜ், விஜய் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சாமுண்டீஸ்வரி கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.இதற்கிடையே குமாரும், சாமுண்டீஸ்வரியும் ஒன்றாக கூலி வேலைக்கு சென்று வருவார்களாம். இதனால் அவர்கள் இருவருக்குமிடையே கள்ளத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக குமார் குடும்பத்தினரை அடிக்கடி மாரியம்மாள் திட்டுவாராம்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு குமார் மகன் பாலமுருகனை மாரியம்மாள் திட்டிப் பேசினாராம். அப்போது அங்கு வந்த மல்லிகா தேவையில்லாமல் சிறுவனை ஏன் திட்டுகிறீர்கள் என தட்டிக் கேட்டதால் இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாம்.இதனால் ஆத்திரமடைந்த ரங்கசாமி, அவரது மகன்கள் கோவிந்தராஜ், விஜய் ஆகிய மூவரும் மல்லிகாவை இரும்பு கம்பியாலும், கட்டையாலும் தாக்கி விட்டுத் தப்பினராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த மல்லிகா பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக அதிராம்பட்டினம் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து ரங்கசாமி, அவரது மகன்கள் கோவிந்தராஜ், விஜய் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.