மணப்பாறை அருகே பட்டப்பகலில் ஆயுதங்களுடன் காரை வழி மறித்து 10 லட்சம் கொள்ளை:
மணப்பாறை அடுத்த வீரப்பூர் அருகே பட்டப்பகலில் ஆயுதங்களுடன் காரை வழி மறித்து 10 லட்சம் கொள்ளை போனது. கொள்ளையர்களைப் பிடிக்க டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை
மணப்பாறை அடுத்த வீரப்பூர் அருகே பட்டப்பகலில் ஆயுதங்களுடன் காரை வழி மறித்து 10 லட்சம் கொள்ளை போனது. கொள்ளையர்களைப் பிடிக்க டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சீ.எம். பாளையம், நடுவப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல். இவருடைய மகன் பழனிராஜா, வயது 30, இவர் நகை வியாபாரி. இவருடன் அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அருண்ராஜா, வயது 30, இவர்களின் நண்பர் பிரசாத் என்பவர் குறைந்த விலையில் தங்க நகைகள் கிடைப்பதாகவும் அதற்குரிய பணத்தை எடுத்து வருமாறும் கூறினார்
இதனைதொடர்ந்து பழனிராஜா, அருண்ராஜா மற்றும் கடலூரைச் சேர்ந்த டிரைவர் கார்த்தி வயது 27 என்பவரின் வாடகை காரில் மூவரும் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குளித்தலை பிரிவு சாலைக்கு வந்தனர்.
அப்போது அங்கு வழி மறித்து 6 பேர் கொண்ட கும்பல் டாடா சுமோவில் வந்து காரையும் கடத்தினர். வையம்பட்டி அடுத்த வீரப்பூர் அருகே உள்ள மத்தக்கோடங்கிபட்டி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மூவரையும் இறக்கிவிட்டு அவர்களின் காரில் வைத்திருந்த 10 லட்சத்தையும், கார் சாவியையும் பறித்துச் சென்றனர்.
மூவரும் சத்தம் போட்டதையடுத்து கிராம மக்கள் சுமோவைப் பிடிக்க முயற்சித்தனர். சுமோ மின்னல் வேகத்தில் சென்றதையடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேசன், ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணத்தைப் பறி கொடுத்த மூவரையும் விசாரணை செய்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைப் பிடிக்க டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பட்டப் பகலில் நடந்ததால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.