சிதம்பரம் அருகே வடக்குமாங்குடியில் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்: மருத்துவமனை முன்பு சாலைமறியல்
சிதம்பரம் அருகே வடக்குமாங்குடியில் திங்கள்கிழமை இரவு மர்மநபர்கள் தாக்கியதில் தலித் இளைஞர்கள் இருவர் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று
சிதம்பரம் அருகே வடக்குமாங்குடியில் திங்கள்கிழமை இரவு மர்மநபர்கள் தாக்கியதில் தலித் இளைஞர்கள் இருவர் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் தலித் மக்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தில் மக்களவைத் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் தொடர்பாக கடந்த ஏப்.24-ம் தேதி தேர்தல் முடிவுற்றவுடன் இரவு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் ஒன்று உருட்டு கட்டை மற்றும் ஆயுதங்களுடன், அப்பகுதியில் உள்ள மற்றொரு சமூகமான தலித்மக்கள் வசிக்கும் காலனிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வீடுகள், வாகனங்கள் மற்றும் பொருள்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் 6 பேர் காயமுற்றனர். இருவர் இறந்தனர். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வடக்குமாங்குடியைச் சேர்ந்த குமார் உள்ளிட்ட 50 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் வடக்குமாங்குடியைச் சேர்ந்த தலித் இளைஞர்களான விக்னேஷ் (23), சஞ்சய்காந்தி (25) ஆகிய இருவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது முகத்தை மூடிக்கொண்டு வந்த மர்மநபர்கள் இருவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் இருவரும் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டக்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வன் மற்றும் வடக்குமாங்குடி கிராமத்தில் வசிக்கும் தலித்மக்கள் தங்களது குடும்ப அட்டையுடன் வந்து சிதம்பரம் அரசு மருத்துவமனை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், தனி வட்டாட்சியர்கள் எஸ்.சீனுவாசன், மு.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாகவும், மாவட்ட ஆட்சியர் வடக்குமாங்குடி கிராமத்திற்கு வந்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்ததை அடுத்து மறியலை மக்கள் வாபஸ் பெற்றனர்.