பெற்றோரின் பொருளாதார சுமையைக் குறைக்கவே மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள்: எம்.எல்.ஏ
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, பெற்றோரின் பொருளாதார சுமையைக் குறைக்கவே மாணவர்களுக்கு விலையில்லா 14 வகையான பொருட்களைக் கொடுத்து சிறப்பான உயர்கல்வியை ஏழை மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று ராஜபாளையம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.கோபால்சாமி கூறினார்.
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, பெற்றோரின் பொருளாதார சுமையைக் குறைக்கவே மாணவர்களுக்கு விலையில்லா 14 வகையான பொருட்களைக் கொடுத்து சிறப்பான உயர்கல்வியை ஏழை மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று ராஜபாளையம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.கோபால்சாமி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 125 பள்ளிகளில் படிக்கும் 10,517 மாணவ மாணவியருக்கு பள்ளி தொடங்கிய முதல் நாளிலேயே அரசின் விலையில்லா சீருடை, புத்தகங்கள், கிரையான்கள் உள்ளிட்டவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கான விழா நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தலைமையில் நடைபெற்றது.சரக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செ.பாலமுருகன், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ.ஜான் சேவியர்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாணவர்களுக்கு அரசின் விலையில்லா பொருட்களை வழங்கி கே.கோபால்சாமி எம்.எல்.ஏ. பேசுகையில் கூறியதாவது:
பெற்றோர்கள் மிகுந்த கஷ்டப்பட்டு மாணவர்களை படித்து வைத்த காலம் போய், பெற்றோர்களின் சுமையை குறைத்து மாணவர்களை சந்தோஷமாக படிக்க வைக்க முதல்வர் ஜெயலலிதா அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். மாணவர்களின் கடமை படிக்க வேண்டியது மட்டும் தான். படித்து சிறப்பான மதிப்பெண் பெற்றால் எந்த உயர் படிப்பையும் தொடர அரசு உதவி செய்யும். பல்வேறு வங்கிகள் கடன் வழங்குகின்றன. படிப்பிற்கு பணம் தடையாக இருக்காது. பெண் கல்வியை ஊக்குவிக்க முதல்வர் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறார்.
அரசின் நலத்திட்டங்களை பெறும் மாணவர்கள், நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் பிரயோஜனமுள்ள குடிமக்களாக திகழ வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் அவர்.விழாவில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பாலமுருகன் பேசுகையில், பள்ளி தொடங்கிய முதல் நாளே சரகத்தில் உள்ள 125 பள்ளிகளி்ல் படிக்கும் 10517 மாணவர்களுக்கும் அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.தலைமை ஆ்சிரியை இ.ஜெஸிந்தா நன்றி கூறினார்.