FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திமுக அரசைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் நாளை(மார்ச் 17) ஆர்ப்பாட்டம்: இபிஎஸ்

திமுக அரசைக் கண்டித்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் நாளை(மார்ச் 17) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Updated On : 16 மார்ச் 2026, 12:28 pm IST
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

திமுக அரசைக் கண்டித்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் நாளை(மார்ச் 17) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2021-ஆம் ஆண்டு, மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திமுக-வினுடைய ஆட்சியில் தமிழ்நாடு கஞ்சா, கள்ளச் சாராயம், போதைப் பொருள் மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தெருக்களில் கஞ்சா புழக்கம் இல்லாத இடமே இல்லை என்கிற நிலையை இந்த அரசு உருவாக்கி இருக்கிறது. வேதனையோடு சொல்வதென்றால், கல்லூரி மாணவர்களும், மாணவிகளும், பள்ளிக்கூட மாணவ மாணவிகள்கூட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை மிகச் சாதாரணமாக பயன்படுத்துகிற செய்திகளும், காட்சிகளும் நாட்டின் முக்கிய ஊடகங்களிலேயே வெளியிடப்பட்டு வருகிறது.

சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்த நேரத்திலும் காவல் துறையை கையில் வைத்திருக்கின்ற தமிழ்நாட்டின் முதலமைச்சர் கள்ள மவுனம் சாதித்ததோடு இல்லாமல் விளம்பர ஆட்சிக்கான போட்டோ ஷூட்களை நடத்திக்கொண்டிருந்தார்.

Advertisement

Advertisement

போதை கும்பல், கூலிப் படைகள் ஏற்படுத்திய சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளில் உச்சமாக, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான, வரலாற்றில் முன் எப்போதும் பார்த்திடாத அளவிற்கு மிகக் கொடூரமான பாலியல் கொடுமைகளும், கொலைகளும் அரங்கேற்றப்படுகின்றன.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 30 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 4 பட்டியலின இளைஞர்கள் லாக்கப்பில் மரணமடைந்துள்ளனர். இதிலிருந்து, தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எதைநோக்கிச் செல்கிறது என்பதையும்; வேலியே பயிரை மேய்கிறது என்பதையும் மக்கள் தெளிவாக உணர்ந்து மிகுந்த வேதனைப்படுகின்றனர்.

தமிழ்நாட்டு மக்கள் பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள். தமிழ் நாடு ரவுடிகளினுடைய புகலிடமாக, கூலிப் படைகளின் ராஜ்ஜியம் நடக்கின்ற இடமாக மாற்றப்பட்டிருக்கிறது.

திமுக அரசு சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஏன்? என்கிற கேள்வியை மக்கள் கேட்கிறார்கள்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, போதைப் பொருள் விற்பனையில் திமுக பிரமுகரே கைதாவதும்; கள்ளச் சாராய விற்பனையில் திமுக பிரமுகரே ஈடுபட்டிருப்பதும்; மணல் கொள்ளை, இயற்கைவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் திமுக-வின் சட்டமன்ற உறுப்பினரே ஈடுபட்டிருப்பதும்; ஏழை, எளிய மக்களை ஏமாற்றி கிட்னி திருடிய வழக்கில் திமுக-வின் சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான மருத்துவமனையையே குற்றம் சாட்டப்பட்டிருப்பதும்; பல்வேறு பாலியல் வன்கொடுமைகளில் ஆளுங்கட்சி பிரமுகர்களே முதன்மைக் குற்றவாளிகளாக ஈடுபட்டிருப்பதும்; இந்த குற்றங்களுக்கெல்லாம் ஆளுங்கட்சியும், முதலமைச்சரும் அரணாக நின்று பாதுகாப்பு கொடுக்கிறார்களோ என்கிற பெரும் சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த முதலமைச்சரின் நிர்வாகத் திறமையற்ற, மக்கள் விரோத ஆட்சியைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு மக்கள் பெரும் கோபம் கொண்டிருக்கிறார்கள்.

திமுக ஆட்சியின் மேற்கண்ட மக்கள் விரோதச் செயல்களின் வெளிப்பாடுதான், ஆளும் கட்சிக்காரர்களை மக்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தியும், வெளியேறச் சொல்லி முழக்கமிட்டும் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். எனவே, இந்த கொடூர ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களுடைய முகத்திரைகளை கிழிக்கும் வண்ணமும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெருந்திரளாக மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் அனைத்து மக்களும் அலை அலையாகத் திரண்டு வந்து பேராதரவினைத் தர வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மக்கள் விரோத ஆட்சியை தூக்கி எறிவதற்கு கட்சி சொந்தங்கள் திரண்டு வாருங்கள் என்று அறைகூவல் விடுக்கிறேன்!! இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

The AIADMK leader said that since the day the DMK assumed office, law and order in TN has been completely undermined.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments