மக்களவைத் தேர்தலில் இந்து மக்கள் கட்சிப் போட்டி: அர்ஜூன் சம்பத்
மக்களவைத் தேர்தலில் இந்து மக்கள் கட்சிப் போட்டியிட உள்ளது. இதற்காக 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறப்படுகிறது என்றார் அக் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத்.
மக்களவைத் தேர்தலில் இந்து மக்கள் கட்சிப் போட்டியிட உள்ளது. இதற்காக 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறப்படுகிறது என்றார் அக் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத்.
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனைத்துக் கட்சிகளும் சிறுபான்மையினர் என்று கூறி கிறிஸ்தவ-முஸ்லிம்களின் குறைகளை மட்டுமே கேட்க முன்வருகின்றனர். இந்துக்களின் குறைகளைக் கேட்க ஆளில்லை. அரசியல் அனாதைகளைப் போல இந்துக்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இதனால், இந்து மக்கள் கட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கத்தான் முதலில் முடிவு செய்திருந்தோம். ஆனால், தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடும், அக் கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் போன்றோரின் சமீபத்திய பேச்சுகளும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து 40 தொகுதிகளுக்கும் விருப்பமனு வாங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. யாருடனும் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.தமிழகத்தை நிர்வாக வசதிக்காக 3 மாநிலங்களாகப் பிரிக்கலாம். அவ்வாறு செய்தால் தொழில்வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். தாமிரவருணி நதியை சர்வதேச புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும். ஏழைகளுக்காக போராடிய அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில மாநாட்டை நடத்துவது. தானுலிங்க நாடாரின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாட வேண்டும். அவரது பெயரில் மணிமண்டபம் கட்ட வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர் உதயகுமாரை உடனடியாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். காஷ்மீரைப் போல தமிழகத்திற்கும் விஷேச அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழுக் கூட்டத்தின்போது, திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட கட்சியின் மாவட்டப் பொதுச்செயலர் எஸ்.எஸ்.எஸ். மணி விருப்பமனு தாக்கல் செய்தார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட ராமகுணசீலனும், மதுரை தொகுதிக்கு சோலைகண்ணனும் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்தனர்.