சபரிமலை ஐயப்பன்கோயில் சீசனை முன்னிட்டு நவ.17 முதல் குமுளி, கம்பம்மெட்டு சாலையில் ஒருவழி போக்குவரத்து
சபரிமலை ஐயப்பன் கோயில் சீசனை முன்னிட்டு, நவ.17-ம் தேதி முதல் குமுளி, கம்பம்மெட்டு சாலை வழியாக கேரளத்துக்கு சென்று வருவதற்கு ஒரு வழி பாதை
சபரிமலை ஐயப்பன் கோயில் சீசனை முன்னிட்டு, நவ.17-ம் தேதி முதல் குமுளி, கம்பம்மெட்டு சாலை வழியாக கேரளத்துக்கு சென்று வருவதற்கு ஒரு வழி பாதை போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தேனி மாவட்டம், குமுளி, கம்பம்மெட்டு சாலை வழியாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கிலான ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் சென்று வருவது வழக்கம். சபரிமலைக்குச் சென்று வரும் வாகனங்கள் குமுளி சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பல நேரம் காத்திருப்பதை தவிர்பதற்கு, ஐயப்பன்கோயில் சீசனில் குமுளி, கம்பம்மெட்டு சாலையில் ஒரு வழி பாதையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு, சபரிமலை ஐயப்பன்கோயில் சீசன் கார்திகை முதல் தேதியில்(நவ.17) தொடங்குகிறது. நவ.17-ம் தேதி முதல், தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் குமுளி வழியாக செல்ல அனுமதிக்கப்படும். சபரிமலையில் இருந்து தேனி மாவட்டத்துக்கு திரும்ப வரும் வாகனங்கள் கம்பம்மெட்டு சாலை வழியாக வர வேண்டும். ஒரு வழிபாதை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கம்பம் மற்றும் கம்பம்மெட்டு சாலையில் காவல் துறை சோதனைச் சாவடி அமைக்கப்படும்.
Advertisement
வாகன அனுமதி சீட்டு: தேனி மாவட்டம் வழியாக கேரளத்துக்குச் செல்லும் சுற்றுலா வாகனங்கள், கூடலூர் அருகே லோயர்கேம்பில் செயல்பட்டு வந்த போக்குவரத்து சோதனைச் சாவடியில் தற்காலிக அனுமதிச் சீட்டு பெற்று வந்தனர். தற்போது இந்த சோதனைச் சாவடி, தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்துக்குக் கழக பணி மனை அருகே இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சபரிமலைக்குச் செல்லும் சுற்றுலா வாகனங்கள் பழனிசெட்டிபட்டியில் உள்ள போக்குவரத்து சோதனைச் சாவடியில் கேரளத்துக்குச் சென்று வர தற்காலிக அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.