விருதுநகரில் பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கைது
விருதுநகர் அருகே அரிவாள், பட்டாகத்தி போன்ற ஆயுதங்களுடன் நடமாடிய மாற்றுத்திறனாளி உள்பட 5 பேரை மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே அரிவாள், பட்டாகத்தி போன்ற ஆயுதங்களுடன் நடமாடிய மாற்றுத்திறனாளி உள்பட 5 பேரை மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சி சாலையில் பயங்கர ஆயுதங்களுடன் இரவு நேரங்களில் முள்புதரில் மறைந்து நடமாடுவதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உடனே அதை கண்காணிக்குமாறு காவல் துணைக்காணிப்பாளர் சக்கரவர்த்திக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் பயிற்சி துணைக் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி, விருதுநகர் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பழனிவேல், மேற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராமச்சநதிரன் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை மாலையில் திடீர் ரோந்து சென்றனர்
. அதில் விருதுநகர்-வடமலைக்குறிச்சி சாலையில் செல்லும் போது மதுபானக் கடைக்கு பின்புறம் முள்புதருக்குள் இருந்து 5 பேர் போலீஸாரை பார்த்ததும் தப்பியோட முயற்சி செய்தனர். அவர்களை சுற்றி வளைத்து போலீஸார் பிடித்து சோதனையிட்டத்தில் வாள், பட்டாக்கத்தி, அரிவாள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் ஆகியவைகளை வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே அதை பறிமுதல் செய்து விசாரித்ததில், விருதுநகர் அருகே வில்லிபத்திரியைச் சேர்ந்த கருப்பையா மகன் கார்த்திக்(33), சின்னையாபுரம் நாகராஜன்(48), துலுக்கப்பட்டி கணேஷ்குமார்(25), விருதுநகரைச் சேர்ந்த காரல்மார்க்ஸ்(29), பர்மா காலனியைச் சேர்ந்த காஜாமைதீன்(23) என தெரியவந்தது.
மேலும், கடந்த 2012ல் விருதுநகர் மேற்கு தெருவைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் எஸ்.ஆர்.நாகராஜன், நகராட்சி உறுப்பினராக இருந்த தங்கப்பாண்டியம்மாள் ஆகியோரை தேசபந்து மைதானத்தில் வெட்டி கொலைச் செய்யப்பட்டனர்.
Advertisement
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஐயப்பன் மற்றும் சிவா ஆகியோர் உள்ளனர். இவர்களை முன்விரோதம் காரணமாக 5 பேரும் கொலை செய்வதற்கு திட்டமிட்டு நோட்டம் விடுவதற்காகவே முள்புதரில் மறைந்திருந்ததாக விசாரணையில் தெரிவி்த்தனர்.
இது தொடர்பாக 5 பேரையும் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஏற்கனவே ஆள்கடத்தல் வழக்கில் ஐயப்பன் மற்றும் சிவா ஆகியோர் மேற்கு காவல் நிலையத்திற்கு கையெழுத்து போடுவதற்காக காரில் வந்த போது, கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாகராஜன் தரப்பினர் பெட்ரோல் குண்டுகளை வீசி கொலை செய்ய முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.