விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக...
விவாகரத்து வழக்கின் விசாரணைக்காக விஜய் மற்றும் சங்கீதா வரும் ஜூன் 15 ஆம் தேதி நேரில் ஆஜராக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவெக தலைவரும் நடிகருமான விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த பிப். 24-ஆம் தேதி இணையவழியில் இந்த மனுவை சங்கீதா தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், விவாகரத்து வழக்கை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.
Advertisement
சங்கீதா தனது மனுவில் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திருந்தார். அதில், “நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறி விஜய் தொடர்பில் இருந்து வருவதால், 2021-ஆம் ஆண்டு முதல் நான் தனியாக வசித்து வருகிறேன். இது சமூக வலைதளங்கள் மற்றும் எங்களது நட்பு வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளதால் நானும் என் குழந்தைகளும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறோம்.
விஜய் உள்பட அனைத்துத் தரப்பினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்ற நோக்கில் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தேவைப்படும்பட்சத்தில் நடிகையையும் இந்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதியாக சோ்க்கவும் தயங்கமாட்டேன்.
இந்த விவகாரத்தில் சுமுகத் தீர்வு காண 2024, ஆகஸ்ட் முதல் 2025, பிப்ரவரி மாதங்களுக்கு இடையே பலமுறை சட்டரீதியாக விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பினேன். விஜய்யை இரண்டு முறை நேரில் சந்தித்தும் இதுதொடர்பாக பேசினேன். இறுதியாக 2025, நவம்பா் 9-ஆம் தேதி அவருடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தினேன்.
ஆனால், பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் வேறு வழியின்றி நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் முதல்கட்ட விசாரணைக்காக இன்று(ஏப். 20) நேரில் ஆஜராகுமாறு விஜய் - சங்கீதாவுக்கு ஏற்கனவே நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
விஜய்யும் சங்கீதாவும் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்றும் கூறப்பட்ட நிலையில், தேர்தல் பணிகள், பாதுகாப்பு காரணங்களால் இருவரும் ஆஜராகவில்லை.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் காணொளி மூலம் ஆஜராக அனுமதி அளிக்கக் கோரி அவரது வழக்கறிஞர் குமரேசன் மனு அளித்தார். குடும்பப் பிரச்சினை என்பதால் ஊடகங்களில் விவாதிக்க தடை கோரி விஜய் தரப்பில் புதிய மனு ஒன்றும் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா, விஜய் - சங்கீதா இருவரும் வரும் ஜூன் 15 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
விஜய் மற்றும் சங்கீதாவின் திருமணம் பிரிட்டனில் 1998, ஜூலை 10-ஆம் தேதி முதலில் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 1999, ஆகஸ்ட் 25-ஆம் தேதி சென்னையில் அவர்களது திருமணச் சடங்குகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.