முகப்பு
தற்போதைய செய்திகள்

மூதாட்டியை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் சிறை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே மூதாட்டியை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:10 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே மூதாட்டியை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

ராதாபுரம் அருகேயுள்ள சீலாத்திகுளத்தைச் சேர்ந்தவர் ஜெகதாம்பாள் (71). இவரது வீட்டின் அருகே கேரள மாநிலம், கோட்டயம் சாலுகுளம் பகுதியைச் சேர்ந்த வீரய்யா மனைவி பானு (52) வசித்து வந்தார். ஜெகதாம்பாளுக்கு சமையல், துணிதுவைத்தல் போன்ற பணிகளை பானு செய்து கொடுத்து வந்தாராம். கடந்த 31-5-2010 ஆம் தேதி இரவு ஜெகதாம்பாளுக்கு, பாலில் மயக்க மாத்திரைகளைக் கலந்து பானு கொடுத்தாராம். அவர் மயங்கியதும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு, வீட்டில் இருந்த 31 பவுன் தங்கநகைகளை எடுத்துக் கொண்டு கேரளத்துக்கு பானு தப்பிச்சென்றாராம். பலத்த காயமடைந்த ஜெகதாம்பாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராதாபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து பானுவை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.முத்துகிருஷ்ணன், குற்றஞ்சாட்டப்பட்ட பானுவுக்கு ஆயுள்சிறை தண்டனையும், ரூ.3000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். இவ் வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் எம்.எஸ்.துரைமுத்துராஜ் ஆஜரானார்.

முழு கட்டுரையைப் படிக்க →