நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல்:வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னையில் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,
பாளையங்கோட்டையில் சட்டக்கல்லூரி மாணவர்-மாணவிகள் வியாழக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களைத் தொடர்ந்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்யும் திட்டத்தைக் கைவிடக்கோரியும், காயமடைந்த மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
அதன்படி பாளையங்கோட்டையில் உள்ள அரசு சட்டக் கல்லூரி மாணவர்-மாணவிகள் திருச்செந்தூர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆணையர் கந்தசாமி, பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர்.
பாளையங்கோட்டை, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து எம்.கே.பி.நகர், சாந்திநகர் வழியாக கட்டபொம்மன் நகருக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் சமாதானபுரத்தில் திருப்பிவிடப்பட்டன. பாளையங்கோட்டை மேட்டுத்திடல், வி.எம்.சத்திரம் ரவுண்டானா வழியாக கே.டி.சி. நகரை அடைந்தன. சுமார் அரை மணி நேரம் தொடர்ந்த இப் போராட்டம், கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர்களிடம் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து விலக்கிக்கொள்ளப்பட்டது.
வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்: இதே கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் சுதர்சன், செந்தில், மணிகண்டன் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.