முகப்பு
தற்போதைய செய்திகள்

மார்ச் 5-ல் தேவசபைக்கு பிரவேசம் செய்யும் சிதம்பரம் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் திருப்பணியை முன்னிட்டு சித்சபையில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தர் சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வருகிற மார்ச் 5-ம் தேதி தேவசபைக்கு பிரவேசம் செய்கிறார். மார்ச் 8-ம்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:50 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் திருப்பணியை முன்னிட்டு சித்சபையில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தர் சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வருகிற மார்ச் 5-ம் தேதி தேவசபைக்கு பிரவேசம் செய்கிறார். மார்ச் 8-ம் தேதி பாலாலயம் சம்ரோஷணம் நிகழ்ச்சி (சிதம்பரம் ரகசியம் சம்ப்ரோஷணம்) நடைபெறுகிறது.

பூலோக கைலாயமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் வருகிற மே.1-ம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீசிவகாமசுந்தர் சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை கும்பாபிஷேகமும், அதே நாளில் ராஜசபை மற்றும் நான்கு ராஜகோபுரங்களும் மகாகும்பாபிஷகம் நடைபெறவுள்ளது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி வேலை செய்வதற்கு வசதியாக ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வருகிற மார்ச் 5-ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணியளவில் சித்சபையிலிருந்து தேவசபைக்கு பிரவேசம் செய்கிறார். இதனை முன்னிட்டு நடராஜர் கோயில் மார்ச் 2-ம் தேதி பாலாயனம் மற்றும் 6 கால யாகசாலை பூஜைகள் தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மார்ச்.8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மேல் 9.15 மணிக்கு மேல் பாலாலய சம்ப்ரோஷண (சிதம்பரம் ரகசியம் சம்ப்ரோஷணம்) வைபம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.

இதுகுறித்து நி.த.நடராஜ தீட்சிதர் தெரிவித்தது:

பாலாலயம் என்பது தற்போது தெய்வங்கள் குடிகொண்டுள்ள கருவறையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் திருப்பணிகள் செய்ய வேண்டியிருப்பின், தெய்வ ஸாந்நித்யத்தை (அருள்புரி ஆற்றலை) அத்தி மரத்தில் செய்யப்பட்ட அருட்பலகையில், வேதங்கள், பூஜா ஸூக்தங்கள், ஆலய பூஜை முறைகள் காட்டிய வழியின்படி நடத்தப்படும். கும்பாபிஷேக யாகசாலை தொடங்கும்போது அந்த அத்திமரப் பலகையில் உள்ள தெய்வ சக்திகளை கும்பாபிஷேக குடங்களில் சக்தியேற்றம் செய்து, அதனை குறிப்பிட்ட காலங்கள் ஹோம பூஜைகள் செய்து, மறுபடியும் அந்த தெய்வசக்தி நிறைந்த தீர்த்தத்தை, அந்தந்த தெய்வங்களூக்கே அபிஷேகம் செய்து மேலும் அருட்சக்தி பெருக ஏற்றவகையில் செய்யப்படும் மஹா வைபவம்.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் மூலவரும், உத்ஸவருமான ஸ்ரீநடராஜபெருமான் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே (ஆனித் திருமஞ்சனம் & மார்கழி ஆருத்ரா தரிசனம்) கருவறையிலிருந்து, வெளி பிரகாரங்களுக்கு வெளிவரும் அற்புத நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்வைக் காணவே லட்சக்கணக்கான பக்தர்கள்

கூடுவார்கள். ஆனால், 05.03.2015 அன்று காலை - கும்பாபிஷேகத்திற்கு என்றே பிரத்யேகமாக தனது இருப்பிடமாகிய சித்ஸபையிலிருந்து, தேவஸபை எனும் மற்றொரு ஸபைக்கு எழுந்தருளும் காணுதற்கரிய மிகப் பெரும் அரிய நிகழ்வாக நடைபெற உள்ளது. அன்று முதல் கும்பாபிஷேக கால பூஜைகள் வரை நித்ய பூஜைகள் தேவஸபையில் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த அரிய நிகழ்வு ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்கு நடைபெறும். இதைப் போன்றதொரு அதிஅற்புத வைபவம் அடுத்த கும்பாபிஷேக சமயத்தில் மட்டுமே நடைபெறும் என்கிறார் நி.த. நடராஜ தீட்சிதர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.