விருதுநகர் அருகே கல்குவாரியை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகை
விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடி வைப்பதால் வீடுகள் சேதமடைந்து வருவதாக கூறி உடனே அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை
விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடி வைப்பதால் வீடுகள் சேதமடைந்து வருவதாக கூறி உடனே அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமனிடம் நேரில் அளித்த மனுவில் கிராம மக்கள் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் அருகே உள்ளது எல்கைபட்டி கிராமம். இக்கிராமத்தின் தெற்கு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இரவும், பகலும் கல்குவாரிக்கு வெடி வைப்பதால் ஏற்படும் சத்தத்தால் வீடுகள் அதிர்வதால் தூங்க முடியாத நிலையுள்ளது. இதுபோன்ற காரணங்களால் வேளாண்மை நிலங்களில் வேலை செய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது. அதனால், இக் கல்குவாரியை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து குறிப்பிட்ட கிராமத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.