கர்நாடகத்தை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும்: த.வெள்ளையன்
தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் கர்நாடக அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன்.
தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் கர்நாடக அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன்.
பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்கத்தின் தொடக்க விழாவில் த.வெள்ளையன் பேசியதாவது:
தமிழக அரசு, மத்திய அரசு, உச்சநீதிமன்றம் போன்றவற்றுக்கு எதிராக கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்டுவது இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகும். தமிழகத்தில் 70 சதவிகிதம் மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர். டெல்டா மாவட்ட மக்களுக்கு பாசன நீராதாரமாக காவிரி உள்ளது. அதனை தடுத்தால் தமிழகத்தில் பெரும்பாலானோர் வேலையிழப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படும். விவசாயம் மட்டுமன்றி குடிநீர்த் தட்டுப்பாடும் உருவாகும் அபாயம் உள்ளது.
கர்நாடக அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி அணை கட்டும்பணி நடைபெற்றால் ராணுவ நடவடிக்கையின் கீழ் தரைமட்டமாக்க வேண்டும். வாழ்வாதாரப் பிரச்னை என்பதால் விவசாயிகளின் பிரச்னைக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு அளித்துள்ளது. அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து மே 5 ஆம் தேதி தஞ்சையில் நடத்தப்படும் மாநாட்டில் தெரிவிப்போம்.
மத்திய அரசு இப் பிரச்னையில் கண்டும் காணாதது போல உள்ளது. தமிழக கட்சிப்பிரதிநிதிகள் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினாலும் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. பிரதமர் அலுவலகம் தூங்குவது போல நடிப்பதாகவே தெரிகிறது. தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்னையைச் சமாளிக்க நீர்மின்திட்டங்களை அதிகரிக்க வேண்டும். நீர்மின் உற்பத்தி மட்டுமே குறைந்த செலவில் அதிக மின்சாரம் கிடைக்கச்செய்யும் என்றார் அவர்.