விருதுநகரில் திருந்திய நெல்சாகுபடியை பின்பற்றி அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆலோசனை
விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை பின்பற்றி கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குநர் கனகராஜ் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை பின்பற்றி கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குநர் கனகராஜ் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் 31 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. குறைந்த செலவில் அதிக வருமானம் ஈட்டுவதற்கு விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடிக்க வேண்டும். அதற்கு முன்னதாக பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு, கொளுஞ்சி உள்ளிட்ட விதைகளை ஏக்கருக்கு 40 கிலோ என்ற அளவில் விதைப்பு செய்து பூக்கும் பருவத்தில் அதை மடக்கி உழவு பணி செய்வதால் நெல் பயிருக்கான சத்து கிடைக்கிறது. அதோடு, மண்வளமும் பாதுகாக்கப்படுவதால், இரசாயன உரங்களின் தேவையும் குறைகிறது. பசுந்தாள் உரப்பயிர்கள் மட்டுமின்றி நன்கு மக்கிய தொழு மற்றும் மண்புழு உரங்களயும் பயன்படுத்தலாம்.
அதேபோல், சான்று பெற்ற நெல் விதைகளை பயன்படுத்துவதால் 1 ஏக்கருக்கு, ஒரு குத்துக்கு ஒற்றை நாற்று நடவு செய்வதற்கு 3 கிலோ விதைகள் போதுமானதாகும். இடர்பாடு உள்ள இடங்களில் ஒரு குத்துக்கு இரண்டு நாற்றுகள் மூலம் 6 கிலோ விதை போதுமானது. தங்கள் விளைநிலங்களில் சம்பா பருவத்திற்கு அந்தந்த பகுதிற்கேற்ப நெல் ரகங்களை தேர்வு செய்து நாற்றாங்கால் தயார் செய்ய வேண்டும்.
Advertisement
திருந்திய நெல்சாகுபடி முறையில் ஒரு ஏக்கருக்கு நடவுக்கு ஒரு சென்ட் அளவு நிலத்தில் நாற்றாங்கால் போதுமானது. நாற்றாங்கால் செய்வதற்கு முன் வயல்மண் மக்கிய தொழு உரத்துடன் 2 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 5 மைக்கோரைசா பூஞ்சாண உயிர் உரத்தையும் இட வேண்டும். நாற்றாங்கால் அமைக்க உள்ள நிலத்தில் நன்கு தொழி உழவு செய்து மேட்டுப்பாத்தி அல்லது பாய் நாற்றங்கால் அமைக்க வேண்டும்.
அதைத் தொடர்ந்து 12 முதல் 14 நாள்கள் வரையிலான இளம் நாற்றுக்களை சதுர நடவு முறையில் குறிப்பிட்ட இடைவெளியில் மார்க்கர் கருவி மூலம் நடவு செய்ய வேண்டும். இம்முறையில் நடவு செய்வதால் வேர் பிடிப்பு அதிகரித்து பக்கசிம்புகள் அதிகம் பிடிக்கும். அதோடு, காற்றோட்டம் மற்றும் வேர்களுக்கு சூரிய வெளிச்சம் கிடைப்பதால் எலிகள், பூச்சி தொல்லைகள் குறைகிறது. களைகளை கட்டுப்படுத்த நடவு செய்த 15 நாள்களுக்கு பின்னர் களை எடுப்பதால், அடுத்து எடுப்பதற்குள் களைகள் மக்கி மண்ணில் புதைந்து பயிருக்கு ஊட்டமளிக்கும் உரமாகிறது. களை எடுப்புக்கான ஆன அதிக செலவு மற்றும் ஆள்கள் தேவையும் குறைகிறது.
நடவு வயலில் 2.5 செ.மீ உயரத்திற்கு நீர் கட்டினால் போதுமானது. இலை வண்ண அட்டையை பயன்படுத்தி பயிருக்கு தேவையான தழைச்சத்துக்களை மட்டும் இடவேண்டும். அதனால், மேற்குறிப்பிட்ட திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, சாகுபடி செலவையும் குறைத்து 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரையில் கூடுதலாக மகசூல் பெற்று பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.