செந்திக்குமார நாடார் கல்லூரியில் சுற்றுச்சூழல் கல்வி அறிமுக விழா
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் மறு சீரமைப்புத்துறை தொடக்கவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் மறு சீரமைப்புத்துறை தொடக்கவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு முதல்வர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். தலைவர் வன்னியராஜன் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக புதுதில்லி பல்கலைக்கழக மானியக்குழு முன்னாள் உறுப்பினரும், சென்னை சமுதாயக்கல்வி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர்.சேவியர் அல்போன்ஸ் பங்கேற்று தொடங்கி வைத்து பேசுகையில், இந்தியாவில் 39 ஆயிரம் கலை அறிவியல் கல்லூரிகளும், 750 பல்கலைக்கழகங்களும் உள்ளன.
இக்கல்வி நிலையங்களில் 20 மில்லியன் மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். அதில், பெரும்பாலான பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பது என்பது அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வேலைக்கு அடிப்படை கல்வித்தகுதி இருந்தும், திறன் இல்லாத நிலையில் இருக்கிறார்கள். இன்றைய நாளில் பல்கலைக்கழகத்திட்டங்கள் திறன் மேம்படுத்தும் விதமாக இல்லை என்பதே குறிப்பிடத்க்கது ஆகும். இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு திறன் மேம்படுத்தும் இந்தியா எனும் தலைப்பில் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசும் வேலையில்லாத இளைஞர்களை தொழில் முனைவோர்களாக ஆ்கவும் உறுதி எடுத்து 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 1380 வேலைகளுக்கு பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நிகழாண்டில் இந்தியாவில் 240 சமுதாய கல்லூரிகளும், 177 கல்லூரிகளில் தொழிற்சார்ந்த படிப்புகளை கல்லூரிகளில் தொடங்க பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவிலேயே முதன் முதலாக இக்கல்லூரியில் சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் மறுசீரமைப்பு எனும் தலைப்பில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இது முன்னோடி படிப்பாக அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
இவ்விழாவில் செயலர் மதன், துணைத்தலைவர் கங்காதரன், பொருளாளர் முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். விழா நிறைவாக கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர் பேராசிரியர் என்.அசோக்குமார் நன்றி கூறினார்.