முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

Updated On : 6 ஏப்ரல், 2017 at 5:41 PM
பகிர்:

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஆர்.கே.நகரில் 22 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பண விநியோகத்தைத் தடுப்பதற்காக 28 சுற்றுக்காவல் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஏட்டளவில் பார்த்தால் இவை வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தான் என்றாலும், நியாயமான, சுதந்திரமான இடைத்தேர்தலை நடத்துவதற்கு ஒரு சதவீதம் கூட உதவி செய்யப்போவதில்லை. 

 ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள சுமார் இரண்டரை லட்சம் வாக்காளர்களுக்கும் தலா ரூ.4 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.100 கோடி பணம் விநியோகிக்கப்பட்டு விட்டது. இதற்குப் பிறகு அதிகாரிகளை மாற்றுவதன் மூலமும், சுற்றுக்காவல் குழுக்களை அமைப்பதன் மூலமும் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. 

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக மொத்தம் 389 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்த ரூ.20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வளவுக்குப் பிறகும் தேர்தலை ஒத்திவைக்க ஆணையம் முன்வராதது ஐயங்களை ஏற்படுத்துகிறது.

வாக்குக்கு பணம் தருவதை தடுத்து நிறுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். எனவே, இனியும் தாமதிக்காமல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒத்திவைத்து, பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

மேலும் வாக்குகளை விலைக்கு வாங்குவதைத் தடுக்கத் தேவையான தேர்தல் சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.