ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு ஜெய் சிவ சேனா ஆதரவு
சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக ஜெய் சிவ சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக ஜெய் சிவ சேனா அமைப்பு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்த அமைப்பின் தலைவர் ஆர். குமாரராஜா, திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களும் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேங்கள் நடத்தப்பட்டன. மேலும், பிரதான திருக்கோயில்களில் அன்னதானத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்துகொண்டு வந்து இந்துக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கியவர் ஜெயலலிதா. எனவே, கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ந்து அதிமுக-வுக்கு ஆதரவு அளித்து செயல்பட்டு வருகிறோம். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ் தலைமையில் இயங்கும் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.
அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற சிகிச்சை அளித்து நோயாளிகளிடம் பணம் பறிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அரசு சார்பில் சிறப்பு குழு அமைக்க வேண்டும்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள்கள் சேர்க்கும் வகையில் மூளைச்சலவை நடைபெறுவதாக வரும் புகார்கள் மீது தனி கவனம் செலுத்தி ஆய்வு செய்ய வேண்டும். வரும் மே 5ஆம் தேதி எங்களது கிளை அமைப்பான பாரதிய இந்து வியாபாரிகள் சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
பேட்டியின்போது, பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர் நடராஜன், இந்து வியாபாரிகள் சங்க மாநில அமைப்பாளர் சசிகுமார், வழக்குரைஞர் பிரிவு சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.