முகப்பு
தற்போதைய செய்திகள்

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி முடியாது என்றும் லுக் அவுட் நோட்டீஸ் தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

புதுதில்லி: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி முடியாது என்றும் லுக் அவுட் நோட்டீஸ் தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்காக ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கார்த்தி சிதம்பரத்தின் மறைமுக கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ கடந்த மே மாதம் 15-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதனிடையே, இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கார்த்தி சிதம்பரத்துக்கு கடந்த ஜூன் மாதம் சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.

பின்னர், அவரைக் கண்காணிக்கப்படும் நபராக அறிவித்து, மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய கார்த்தி சிதம்பரம், மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு இடைக் கால தடை பெற்றார்.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், ஆக.23-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு உத்தரவிட்டது. அதன்படி, தில்லியிலுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை காலை 10.20 மணியளவில் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜரானார்.

கார்த்தி சிதம்பரத்திடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அப்போது, சுமார் 100 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. இதைத்தொடர்ந்து 28-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார்.

இந்நிலையில், தான் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கும்படி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என்றும் லுக் அவுட் நோட்டீஸ் தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கை செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →