முகப்பு
தற்போதைய செய்திகள்

உ.பி. முதல்வர் ஆதித்யநாத் ஆர்எஸ்எஸ் வழியிலேயே செயல்படுவார்: மாயாவதி

உத்தரப் பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத், மாநில வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதைக்

Updated On : 20 மார்ச், 2017 at 10:03 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:31 PM

உத்தரப் பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத், மாநில வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதைக் காட்டிலும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை மையமாக வைத்தே செயல்படுவார் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

மாநில மக்களை மதரீதியாக பிரித்தாளும் நடவடிக்கைகளில் பாஜக அரசு ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்த மாயாவதி, இதுகுறித்து கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி; பாஜக ஆட்சி புரிந்தாலும் சரி, இரு கட்சிகளுமே மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை காக்கப் போவதில்லை. தற்போது மாநிலத்தில் ஆட்சியமைத்துள்ள பாஜக அரசின் முதல்வராக மடாதிபதி ஒருவர் பொறுப்பேற்றுள்ளார்.

மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு அவர் செயல்படப் போவதில்லை; மாறாக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகளின் அடிப்படையிலேயே அவர் பணியாற்றப் போகிறார். உத்தரப் பிரதேச மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் பாஜக அரசு ஈடுபடப் போகிறது.

மீண்டும் ஓர் அசாதாரண சூழல் மாநிலத்தில் நிலவப் போகிறது என்றார் மாயாவதி.
திரிணமூல் எம்.பி. ஆதரவு: உத்தரப் பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத்தை பாஜக தலைமை தேர்வு செய்ததை காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அந்த முடிவுக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுல்தான் அகமது, ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் பேசுகையில், "யோகியாக இருந்தாலும் சரி; இஸ்லாமிய மதகுருவாக இருந்தாலும் சரி; ஆட்சியை வழிநடத்த அனைவருக்கும் ஜனநாயகத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.