திருப்பூர் மாநகரில் மார்க்கெட், மளிகைக் கடைகளில் குவிந்த பொதுமக்கள்
திருப்பூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதால் மாநகரில் உழவர் சந்தை, தற்காலிக மார்க்கெட்டுகள், மளிகைக் கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் சனிக்கிழமை திரண்டனர்
திருப்பூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதால் மாநகரில் உழவர் சந்தை, தற்காலிக மார்க்கெட்டுகள், மளிகைக் கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் சனிக்கிழமை திரண்டனர்.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதிலும் மார்ச் 24 முதல் மே 3 ஆம் தேதி வரையில் இரு கட்டங்களாக 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், உழவர் சந்தை, மார்க்கெட், ஆவின் பாலகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருப்பூர், கோவை, சேலம், சென்னை, மதுரை ஆகிய மாநகராட்சி பகுதிகளில் நோய்த்தொற்று பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில், திருப்பூர், சேலம் மாநகராட்சிகளுக்கு ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை 3 நாள் முழுஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து திருப்பூர் மாநகரில் வரும் 3 நாள்களுக்கு மளிகைக்கடைகள், உழவர் சந்தைகள், தற்காலிக காய்கறி மார்க்கெட், இறைச்சி, மீன் கடைகள் செயல்படாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதே வேளையில் , காய்கறிகள், பால், மீன் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கே வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
திருப்பூர் மாநகரில் சனிக்கிழமை காலை 6 மணி முதலே பொருள்களை வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர். இதில் பெரும்பாலான பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும் இருந்தது காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், மளிகைக் கடைகள், பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தினசரி மார்க்கெட், எல்.ஆர்.ஜி.மகளிர் கல்லூரி, நஞ்சப்பா பள்ளி வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் ஆகிய அனைத்து இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. அதே போல், ராயபுரம், டவுன்ஹால், கருவம்பாளையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தள்ளுவண்டிகளில் காய்கள், பழங்கள் வாங்கவும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசின் உத்தரவுகளை முழுமையாகக் கடைபிடிக்காமல் இருந்தால் கரோனா நோய்த்தொற்றை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.