கர்நாடகத்தில் தொடரும் கனமழை : அமைச்சர்களுக்கு உத்தரவு
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அமைச்சர்களுக்கு முதல்வர் எடியுரப்பா உத்தரவிட்டுள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அமைச்சர்களுக்கு முதல்வர் எடியுரப்பா உத்தரவிட்டுள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவித்துள்ளது.
இது குறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறுகையில்,
கர்நாடக மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், மக்களுக்கு நிவாரண பொருள்களை விநியோகம் செய்யுமாறும் கூறியுள்ளேன்.
மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அவசர நிவாரணப் பணிகளுக்காக ரூ. 50 கோடியை விடுவித்து உத்தரவிட்டுள்ளேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அமைச்சர்கள் முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.
மேலும், நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் நிதி தேவைப்படின் அதை விரைவில் வழங்குவதாக உறுதியளித்துள்ளேன் என எடியூரப்பா கூறினார்.
மாநிலம் முழுவதும் மழைப்பொழிவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தலைமைச் செயலாளருக்கு முதல்வர் அதிகாரப்பூர்வ உத்தரவும் பிறப்பித்துள்ளார்.