கூத்தாநல்லூர் : திருவாருர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்தில் உள்ள செல்லியம்மன் குளக்கரையில் 500 ஆண்டுகள் பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
கூத்தாநல்லூர் வட்டத்தில் ஏழை, எளியவர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கி, வீடு கட்டுவதற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, பெரியக்கொத்தூரில், 18 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கிய இடத்தில், வீடுகள் கட்டுவதற்காக அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அருகில் உள்ள செல்லியம்மன் குளக்கரையில் கல் போன்று ஏதோ கிடைத்துள்ளன. மேலும் தோண்டிய போது தலையில்லாமல் ஒன்னரை அடி உயரத்தில் கற்சிலை இருந்துள்ளது. அச்சிலை அம்மன் சிலை என்பது தெரியவந்தது.
மேலும் விசாரித்தபோது 500 ஆண்டுகளுக்கு மேலான மிகப் பழமையான கற்சிலை என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பெரியக்கொத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் அம்மன் சிலை குறித்து கூத்தாநல்லூர் வட்டாட்சியர் மகேஷ்குமாரிடம் தகவல் தெரிவித்தார்.
அம்மன் சிலையை பார்வையிட்ட மகேஷ்குமார், சிலையை மீட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் சென்றார்.
இதுகுறித்து வட்டாட்சியர் மகேஷ்குமார் கூறியது, தலையில்லாத அம்மன் கற்சிலை கண்டுப்பிடிக்கப்பட்டது குறித்து, அருங்காட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. பழமையான சிலையாகத்தான் தெரிகிறது. வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுக்காப்பாக வைக்கப்பட்டுள்ளன என்றார்.