ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் வீட்டிற்குள் லாரி புகுந்த விபத்தில் ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
ஒசூரிலிருந்து வேலூர் நோக்கி டிரெய்லர் லாரி சென்றது. லாரியை வேலூர் விருதம்பட்டை சேர்ந்த துரைராஜ் (60) ஓட்டிச் சென்றார்.
ஆம்பூர் அருகே வீரவர் கோயில் பகுதியருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்தது.
அதில் டிரைவர் துரைராஜ் இறந்தார். மாற்று ஓட்டுநர் வெங்கடேசன் (45), வீட்டில் இருந்த அஸ்மிதா (13), யுகேஷ் (12), சஞ்சய் (6) ஆகியோர் காயமடைந்தனர்.
ஆம்பூர் கிராமிய காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.