திருவாரூர்: காவல் துறையை கண்டித்து குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
காவல்துறையை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் அருகே புளிச்சகாடி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு, ரசியா தம்பதியினர். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்கள் வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில் கடைசி மகன் சகலையரசன் மட்டும் இவர்களுடன் வீட்டில் இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வடிவேலுக்கும் அவரது வீட்டின் அருகே வசிக்கும் முரளி என்பவருக்கும் இடையே வேலி தகராறு இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 15ம் தேதி முரளி குடும்பத்தினர் வடிவேலுவை தலை மற்றும் கையில் அரிவாளால் வெட்டியதோடு, அவரது மனைவி, உடல் நலமில்லாத மகன் ஆகியோரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
வடிவேலு குடும்பத்தினர் திருவாரூர் அரசு மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இது தொடர்பாக குடவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வழக்கு பதிவு செய்து 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை தாக்குதலில் ஈடுபட்ட முரளி குடும்பத்தினரை கைது செய்யவில்லை எனவும், குடவாசல் காவல்துறையினர் முரளி குடும்பத்தினருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி, தன்னைத் தாக்கிய முரளி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், முரளி குடும்பத்தினருக்கு ஆதரவாக செயல்படும் குடவாசல் காவல்துறையை கண்டித்தும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த வடிவேலு மற்றும் அவரது குடும்பத்தினர் திடீரென திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வாகனம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த நிலையில் அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை மீட்டு உடனடியாக அவர்களை திருவாரூர் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் மாவட்ட ஆட்சியர் வாகனம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.