சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் முழு கடையடைப்பு போராட்டம்: 80 சதவீத கடைகள் அடைப்பு
பென்னிக்ஸ், ஜெயராஜூம் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணை கைதியாக இருந்த அவர்களின் உயிரிழப்புக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
தூத்துக்குடி: சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வருபவர் ஜெயராஜ்(56). இவருடைய மகன் பென்னிக்ஸ்(31). கடந்த 19-ஆம் தேதி இரவு ஊரடங்கு விதிகளை மீறி கடைதிறந்ததாக இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சப்-ஜெயிலில் விசாரணை கைதியாக சாத்தான்குளம் காவலர்கள் அடைத்தனர்.
இந்தநிலையில் பென்னிக்ஸ், ஜெயராஜூம் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணை கைதியாக இருந்த அவர்களின் உயிரிழப்புக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் புதன்கிழமை 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன.
Advertisement
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் வினாயகமூர்த்தி கூறுகையில், சாத்தான்குளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.2 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் இனியும் நடக்காமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.