அதிகரிக்கும் கரோனா தொற்று: மானாமதுரையில் வாரச்சந்தைக்கு தடை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் அச்சத்தால் மானாமதுரையில் வியாழக்கிழமை வாரச்சந்தைக்கு தடை விதிக்கப்பட்டதால் பொருள்களை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் அவதிக்குள
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் அச்சத்தால் மானாமதுரையில் வியாழக்கிழமை வாரச்சந்தைக்கு தடை விதிக்கப்பட்டதால் பொருள்களை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர்.
மானாமதுரை பகுதியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வாரசந்தை நடைபெறும். அப்போது மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி உள்ளிட்ட பொருள்களை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். மார்ச் மாதம் பொதுமுடக்கம் அரிவிக்கப்பட்டதிலிருந்து மானாமதுரையில் வாரசந்தை வளாகம் மூடப்பட்டது. அதன்பின் வழக்கம்போல் சந்தை நடைபெறும் நாளில் வியாபாரம் செய்ய வந்த விவசாயிகள், வியாபாரிகள் மானாமதுரையில் வைகையாற்றுக்குள் கடை விரித்து வியாபாரம் செய்து வந்தனர். பொருள்கள் வாங்க பொதுமக்களும் ஆற்றுக்குள் அதிகளவில் கூடினர். இவர்கள் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவேளியை கடைபிடிக்காமலும் கூட்டமாக நின்று பொருள்களை வாங்கியதால் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டது. காவலர்கள் இவர்களிடம் பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்கள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. மானாமதுரை சந்தைக்கு அதிகளவில் காய்கறி விற்க வரும் திருப்பாச்சேத்தி பகுதி விவசாயிகளின் கிராமங்களில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மானாமதுரை பேரூராட்சி நிர்வாகம் மானாமதுரையில் வாரச்சந்தை நடத்த தடை விதித்து, ஒலி பெருக்கி மூலம் நகர் முழுவதும் அறிவிப்பு செய்தது. மேலும் மானாமதுரை வைகையாற்றுக்குள் எந்தவொரு வியாபாரிகளும் கடை விரித்துவிடக்கூடாது என்பதற்காக பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஆற்றுக்குள் இறங்கும் பாதைகளில் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இதனால் மானாமதுரை வாரச்சந்தையில் வழக்கம்போல் பொருள்களை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள், விவசாயிகள் கடை விரிக்க இடம் கிடைக்காமல் அலைந்து திரிந்தனர். போரூராட்சி நிர்வாகம் நகரில் வீதிகளுக்குள் கடை அமைக்கவும் கட்டுப்பாடுகளை விதித்தது.