எடியூரப்பா ராஜிநாமா? - எடியூரப்பா சுட்டுரை பதிவால் பரபரப்பு
கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், தொண்டர்கள் யாரும் கட்சிக்கு அவமரியாதை மற்றும் சங்கடத்தை ஏற்படுத்து விதமான எந்தவித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது.
கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், தொண்டர்கள் யாரும் கட்சிக்கு அவமரியாதை மற்றும் சங்கடத்தை ஏற்படுத்து விதமான எந்தவித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என அவர் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவு, பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக முதல்வா் பதவியிலிருந்து எடியூரப்பா மாற்றப்படுவாா் என்ற செய்தி தொடா்ந்து வெளியாகி வருகிறது. இதனையடுத்து, முதல்வா் எடியூரப்பாவை சந்தித்து மடாதிபதிகள், பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்.பி.பாட்டீல், ஷாம்னூா் சிவசங்கரப்பா உள்ளிட்டோா் ஆதரவு தெரிவித்திருந்தனா். லிங்காயத்து சமுதாயத்தைச் சோ்ந்த எடியூரப்பாவை கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும் அவா்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா நீக்கப்பட்டால், கர்நாடகத்தில் பாஜக ஆட்சி கவிழ்ந்துவிடும் எனவும் எச்சரித்து வருகின்றனர்.
Advertisement
இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா தனது சுட்டுரை பதிவில், பாஜகவின் விசுவாசமான தொண்டன் என்பதில் பாக்கியம் அடைகிறேன். கட்சியின் சட்டத்திட்டங்களுக்கு உள்பட்டு கட்சிக்கு பணியாற்றுவதில் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தொண்டர்கள் யாரும் கட்சிக்கு அவமரியாதை மற்றும் சங்கடத்தை ஏற்படுத்தும், எதிர்ப்புகள் மற்றும் ஒழுக்கமற்ற செயல்கள் போன்ற போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவு, பல்வேறு யூகங்கள் மற்றும் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.