திருப்பூரில் தனியார் அடகுக் கடையில் 3 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி திருட்டு
திருப்பூரில் உள்ள தனியார் அடகுக்கடையில் 3 கிலோ தங்கம், 9 கிலோ மற்றும் ரூ.25 லட்சம் திருடப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் உள்ள தனியார் அடகுக்கடையில் 3 கிலோ தங்கம், 9 கிலோ மற்றும் ரூ.25 லட்சம் திருடப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் யூனியன் மில் சாலையில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமாக நகை, அடகுக் கடை இருந்து வருகிறது. இவர் கடந்த 15 ஆண்டுகளாக ஒரே இடத்தில் அடகுக் கடை நடத்தி வரும் நிலையில் கடையின் பின்புறம் உள்ள வீட்டில் குடியிருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த வீட்டைக்காலி செய்து வேறு ஒரு பகுதியில் குடியேறிய நிலையில் பின்புறம் உள்ள வீடு காலியாக உள்ளது. இதனிடையே, ஜெயகுமார் வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். இதன் பிறகு வெள்ளிக்கிழமை காலையில் கடையைத் திறந்து பார்த்தபோது கடையில் இருந்த 3 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டப்பட்டது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக ஜெயகுமார் கொடுத்த தகவலின்பேரில் திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு, துணை ஆணையர் அரவிந்த் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாயும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடங்களை சேகரித்து வருகின்றனர்.
நகை, அடக்குக் கடையின் பின்புறம் வழியாக வந்த மர்ம நபர்கள் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக கடை உரிமையாளரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.